Thursday, September 19, 2024
Home History Temples ஆலயம் அறிவோம்

ஆலயம் அறிவோம்

ஆலயத்தில் உள்ள “ஆ”  என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு இலயமாவதற்கு  அல்லது சேருவதற்கு உரிய இடம் என்பது பொருள். ஆகவே, கடவுளது திருவடியில் ஆன்ம இலயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம். ஆணவம் அடக்கி லயித்திருப்பதற்கான இடமே ஆலயம்.

கோ என்றால் கடவுள், இல் என்றால் தங்குமிடம். கடவுள் தங்குமிடம் கோயில் என்று பொருள்.

கடவுள் எங்கு நிறைந்து ஒருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார்.

கோயில்கள் நமது உடம்பின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை “ஷேத்திரம் சரீரப்பிரஸ்தாரம்” என்பர். ஆலயம் மனிதர் உடம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருமூலர்

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்  பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்துங்  காளா மணிவிளக்கே”

எனக் கூறுகிறார். 

மனித உடம்பில் உள்ள பாதங்கள் கோபுரம், முழங்கால் ஆஸ்தான மண்டபம், தொடை நிறுத்த மண்டபம், தொப்புள் பலிபீடம், மார்பு மக மண்டபம், கழுத்து அர்த்த மண்டபம், சிரம் கர்ப்பகிரகம், வலது காது தட்சிணாமூர்த்தி, இடது காது சண்டிகேசுவரர், மார்பில் நடராஜர், கழுத்தில் நந்தி, வாய் ஸ்நபன  மண்டபவாசல், மூக்கு ஸ்நபன மண்டபம், புருவமத்தி லிங்கம், தலையின் உச்சி விமானம் எனவும் மனித உடம்போடு ஒப்பிட்டுக் கூறுவதுண்டு.

 கோபுரம்:

கோபுரம் ஸ்தூலலிங்கமாகும், கோபுர தரிசனம் கடவுளின் பாத தரிசனம் என்பர். ஆண்ட பிண்டங்கள் அனைத்தையும் அடக்கிக்கொண்டு இருக்கும் பரமபுருஷனாகிய இறைவனது ஸ்வரூபமே கோபுரம். உச்சியில் இருக்கும் கும்பம் ஷோடசாந்தம் எனப்படும்.

பிரகாரங்கள்:

கோயிலினுள் இருக்கும் பிரகாரங்கள் மூன்று, ஐந்து,ஏழு எனக் காணப்படும். மூன்று பிரகாரங்கள் அன்னமயம், பிரணமயம், மனோமயம் என்ற மூன்று கோசங்களையும் உணர்த்துகின்றன.ஐந்து பிரகாரங்கள் இவற்றோடு விஞ்ஞானமயம், ஆனந்தமயம் எனும் கோஷங்களைக் குறிக்கின்றன. ஏழு பிரகாரங்கள் இவற்றோடு ஸ்தூல, சூட்சுமங்களை விளக்குகின்றன. பலமுறை பிரகாரங்களைச் சுற்றி வளம் வருவது கோஷங்களைக் கடந்து இறைவன் விளங்குகிறான் என்பதை நினைவூட்டப்படுகிறது.

விமானம்:

விமானம் நாகரம், திராவிடம் , வேசரம் என மூன்று வகைப்படும். பீடம் முதல் அனைத்தும் சதுரமாக உள்ள விமானம் நாகரம் எனப்படும்.கண்டம் முதல் வட்டமாக உள்ள விமானத்தை வேசரம் என்பர்.கண்டம் முதல் எட்டு கோணமாக உள்ள விமானம் திராவிடம். ஆண் விமானமாக நாகரத்தையும், பெண் விமானமாக திராவிடத்தையும், மூன்றாம் பாலின விமானமாக  வேசாரத்தையும் கூறுவர்.

கொடிமரம்:

கொடிமரம் சூட்சுமலிங்கமாகும், இதன் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்பை உணர்த்துகிறது.இது பிரமபாகமாகும், அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது காத்தலைக்  குறிக்கும். இது விஷ்ணுபாகமாகும், மேல் உருண்டு நீண்டபாகம் உருத்திரனைக் குறிக்கும். அது சங்காரத் தொழிலின் அறிகுறியாகும். ஆகவே கொடிமரம் மும்மூர்த்திகளையும், முத்தொழில்களையும் உணர்த்துகிறது.

கர்ப்பக்கிரகம்:

ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானம் மிகவும் முக்கியமான இடமாகும்.இது எல்லா உலகங்களையும் படைத்ததிற்க்குக்  காரணமான மூலப்பிரகிருதியின் இடமாகும். ஒரு கோயில் எந்த மூர்த்திக்கு உரியதோ அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அதன் நேராக அந்த மூர்த்திக்கு உரிய வாகனம் அல்லது ஊர்தியையும் அதன் பின் ஒரு பலீபீடத்தையும் அமைத்திருப்பார்.  

பலீபீடம்:

பலீபீடம் பாசத்தை உணர்த்துகிறது, அதனை ஸ்ரீபலி நாதர் எனவும் கூறுவார். கோயிலில் எட்டு மூலைகளிலும், எட்டு பலீ பீடங்கள் உண்டு. அவை இந்திரன், அக்கினி,யமன்,நிறுத்தி,வருணன்,வாயு,குபேரன்.ஈசானன் எனும் எட்டு திக்பாலர்களை உணர்த்துகிறது . பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்தமாதாக்களை உணர்த்தும் பீடங்களும் உள்ளன. இவைகளுக்கு எல்லாம் தலைமை பீடமே மூர்த்தியின் ஊர்திக்கு பின்னால் உள்ள பலிபீடமாகும்.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments