அசுரர்களை அகற்றுவதன் பொருட்டும், சிவகணங்களையும், தேவர்களையும் அழைத்ததற் பொருட்டும், ஆலயத்தை இரட்சித்தற் பொருட்டும், பக்தர்களை பாதுகாக்கவும் கொடிமரம் நிறுவப்படுகிறது. சிவன் கோயிலில் கொடிமரத்தின் மேல்பாகத்தில் நந்தியையும், விஷ்ணு கோயிலில் கருடனையும் தேவி ஆலயங்களில் சிங்கத்தையும்,விநாயகர் ஆலயத்தில் மூஷிகத்தையும், முருகன் ஆலயத்தில் மயிலையும், சாஸ்தாகோவிலில் குதிரையையும் அந்தந்த தேவதைகளுக்கு தக்கவாறு அமைத்துள்ளனர்.
மூலலிங்கத்திற்கு செய்யும் அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், அர்ச்சனை முதலிய அனைத்தும் கொடிமரத்திற்குச் செய்யவேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழ் முதலிய மரங்கள் இதற்குகந்ததாகும். பலவும், மாவும், மத்திமம். கழுகு,பனை,தீக்கு முதலியன ஆதமம். கொடிமரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் இருப்பது சிறப்பு. நீளம் ஆலயத்தின் அளவிற்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.
கொடிமரத்தின் தத்துவத்தை யோகநிலையோடும் ஒப்பிடலாம்.
கொடிமரத்தூண் போன்றது உடம்பு. உடம்பில் இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியாகச் செல்லும் பிராண வாயுவை நாடு நாடியாகிய சுஷும்னையில் நிலை நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும்.
அப்பொழுது பிராண வாயு அடங்கும். பஞ்சேந்திரியங்கள் ஒடுங்கும். மனம் ஒருநிலைப்படும். இறைவன் வெளிப்படுவான்.
கொடிமரத்தை ஒரு யோகியின் உடம்பினுள் விளங்கும் மேருதண்டம், அல்லது முதுகெலும்பிற்கு ஒப்பிடலாம். இதனுள் ஆராதரங்களும், சுஷும்னா நாடியும் அமைந்திருக்கின்றன, குண்டலினி மூலாதாரத்திலிருந்து வெளியேறி ஆறாதாரங்களையும் கடந்து சஹஸ்ராரத்தை அடைகிறது. அங்கே அடையும் பொழுது அமிர்தம் பொழிகிறது எனும் தத்துவத்தை இது விளக்குகிறது.