தூதுவளை, சிறு சிறு முட்களைக் கொண்ட இலைகளையும், ஊதாநிறப் பூக்களைக் கொண்ட கொடியினமாகும். இதன் காய்கள் சுண்டைக் காய்கள் போன்ற தோற்றத்தில் பச்சையாகவும் பழங்கள் சிவப்பாகவும் இருக்கும்.
இந்த தூதுவளையை தூதுவேளை, தாதுளம், தூதுளை என்று பல பெபயர்களில் குறிப்பிடுகின்றனர். இதன் வேர் முதல் பழம் வரை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
தூதுவளைப் பற்றி வடலூர் வள்ளலார் பெருமான் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“அறிவை விளக்குவதற்கும், கவன சக்தியை உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும் கபத்தை அகற்றுவதற்கும் யோக்கியத்தையுடைய ஒளஷதி தூதுவளை தேகக் கெடுதியாகிய அசுத்தம் நீக்கி, தேகம்வலுவுள்ளதாக நெடுநாளைக்கு இருக்கும். முக்தி அடைவதற்குச் சகாயமாயிருக்கும்.
தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நேோடியலா பெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)
பொருள்:
தாதுவளயை கற்பமுறையாகவேனும், கறியாகவேனும் உட்கொண்டு வந்தால் உடலில் கபத்தால் ஏற்பட்ட நோய்கள்யாவும் நீங்கும்.
நம் முன்னோர்கள் பருவதிலை மாற்றம் உண்டாகும் காலங்களில் நோய்
அணுகாதவாறு பாதுகாக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,தூதுவளையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
தூதுவளை சனியை நீக்கும் தன்மை கொண்டது.
தூதுபத்திரியுண்கவையாக்கும்பு
தாதுவைத்தழைப்பித்திடும் காயது
வாதபித்தகபத்தையு பாற்றுவேர்
ஒதும் லல்லிடன் நோயுமொ மிக்குபே.
-தேரையர் குணபாடம்
பொருள்:
தூதுவளை இல்லை உணவுக்கு சுவையைக் கூட்டும். பசியைத் தூண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
தூதுவளை பூ தாதுவை விருத்தி செய்யும் தூதுவளை காய் வாத பித்த, கபமெனும் முக்குற்றத்தைப் போக்கும். தூதுவளை வேரும், கொடியும் இருமல், இரைப்பு முதலிய சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.
தூதுவளையின் பயன்கள்.
இன்றைய புறச் சூழ்நிலை சுத்தமானதாக இல்லை. அசுத்தம் கலந்த காற்று, நீர் இவற்றால் உடலானது பலவித நோய்களுக்கு ஆளாகிறது. மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, இருமல், மண்டைக்குத்தல், சுவாசம் சம்பந்தப்பட்ட இரைப்பு, நுரையீரல் சளி, நோய்களை சந்திக்க தேரிடுகிறது.
இப்படிப்பட்ட நோய்களிலிருந்து நம்மை விடுவிக்க தூதுவளை சிறந்த மருந்தாகிறது.
பயன்படுத்தும் முறைகள்.
தூதுவளை இலைகளை நிழலில் காயவைவத்து நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
இந்த பொடியை காலை உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி பொடி எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மேற்கூறிய கப நோய்கள் நீங்கும்.
தூதுவளை பொடியை தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, எலும்புருக்கி போன்ற நோய்கள் குணமாகும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் கபம் சம்பத்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். மார்புச்சளி, மேலும் இரத்தத்தில் கலந்துள்ள சளி, வயிற்றில் உள்ள சளி போன்றவை நீங்கும்.
குடல் புண்ணால் அவதியுறுபவர்கள் தூதுவளையை வாரம் இருமுறையாவது சேர்த்துக்கொள்வது நல்லது.
தூதுவளையை 1 கைப்பிடி எடுத்து, அதனுடன் சின்னவெங்காயம் 3, பூண்டு பல் 2, மிளகு, சீரகம், சோம்பு போன்றவற்றை சிறிதளவு சேர்த்து சூப் போல் செய்து சாப்பிட்டு வந்தால் கப நோய்கள் நீங்கும். வயிற்றுப்புண் நீங்கும்.
சரநிலை சுவாசம் செய்பவர்களுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும். தூதுவளையை ஞானசிருஷ்டி மூலிகை என்று கூறுவார்கள்.
தூதுவளையின் பயனை அறிந்து, அதனை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.