அஞ்சறைப்பெட்டிக்குள்ளே ஆரோக்கியத்தைப் பொதித்து வைத்தனர் நம் முன்னோர்கள். தென்னிந்திய சமையல் அறையில் இந்த அஞ்சறைப்பெட்டி இல்லாத இடமே இல்லை. இவற்றில் உள்ள வெந்தயம், சீரகம், சோம்பு, கடுகு மிளகு என ஒவ்வொன்றும் மனிதனை நோயின்றி காக்கும் சிரஞ்சீவிகளாகும்.
இதில் வெந்தயத்தின் அளப்பறிய பயன்கள் பற்றி பார்ப்போம். வெந்தயம் லேசான கசப்புச்சுவை உடையது.இதனை உணவில் சேர்ப்பதால் உணவுக்கு நறுமணத்தைத் தருவதோடு நல்ல ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
எலும்பை உறுதியாக்கும் பாஸ்பரஸ் தாது உப்புக்களும், தசையைப் பாதுகாக்கும் லெசிதின் பொருளும் முட்டையில் உள்ள சத்துக்களைப் போல் நுக்லியோ அல்புமினும் நிறைந்துள்ளது.
வெந்தயத்தை மெந்தியம், மேதி, வெந்தை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
பித்தவுதிரம்போகும்பேராக்கணங்களும்போம்
அத்திசுரத் தாகம் அகலுங்காண்-தத்துமதி
வேக இருமலோடு வீறுகயம் தணியும்
போகமுறும் வெந்தயத்தைப் போற்று
-அகத்தியர்குணவாகடம்
பொருள்- குருதியழல், எலும்பு சம்பந்தப்பட்ட சுரம், உடல் எரிச்சல், நீர்வேட்கை, இளைப்பு, இருமல் இவைகள் நீங்கும். ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில், போட்டு உளறவைத்து காலையில் அந்த நீரை வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிட்டும் வந்தால் வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். செரிமான சக்தி அதிகரிக்கும். உதடு வெடிப்பு, நீங்கும். பல் ஈறுகள் பலப்படும். ஊறவைத்த வெந்தயத்தை பச்சரிசி சேர்த்து வேகவைத்து தேவையானளவு தேங்காய்த்துருவல், பனைவெல்லம் சேர்த்து காலை உணவாக வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். நரம்புகள் புத்துணர்வு பெறும்.
இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். இரத்தம் தேவையான பிராணனை உட்கிரகித்துக்கொள்ளும். இரத்தக்குழாய்களில் ஒட்டியுள்ள பசைபோன்ற
கொழுப்புப்பொருள் வெளியேறும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப்பொருட்கள் நீங்கும்.
- சிறுநீரகத்தை ராக செயல்படவைக்கும்.
- வாயுத்தொந்தரவு நீங்கும்.
- இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும்.
- சருமம் புத்துணர்ச்சி பெறும்.
- எலும்புகள் பலப்படும். பல் கூச்சம் நீங்கும்.
வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் பாலுட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும். உடல் சூடு குறையும். கருப்பை பலப்படும்.
வெந்தயத்துடன் உளுந்து, அரிசி சேர்த்து அரைத்து தோசையாக செய்து சாப்பிடலாம். களியாகவும் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் அசதி நீங்கும். நரம்புகள் பலப்படும். செரிமான சக்தி அதிகரிக்கும்.
வெந்தயத் தோசையுடன் கருணைக் கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு குறைந்து, மூலநோயின் பாதிப்பு நீங்கும்.
வெந்தயத்தை பாசிப்பயறுடன் சேர்த்து அரைத்து தலை, உடல் எங்கும் பூசி குளித்து வந்தால் சருமப் பாதிப்புகள் நீங்கும்.
வெந்தயம், செம்பருத்திப் பூ, பாசிப்பயறு, சியக்காய், கறிவேப்பிலை, இவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். தலைமுடி உதிர்தல், புழுவெட்டு, பொடுகு நீங்கும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், சளித்தொல்லைக்கு வெந்தயக் கஞ்சி, வெந்தயத் தோசை மிகவும் நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் நோய்தான் நீரிழிவு. உணவு முறை மாறுபாடு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் இவைகளால் கணைய நீர் சுரப்பு குறைந்து போகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
கணையத்தை சீராக செயல்படவைக்கவும், சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் வெந்தயம் சிறந்த மருந்தாகும்.
வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு நீரில் கலந்தோ அல்லது பொடியாகவோ சப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
நீரிழிவு நோயாளிகள் வெந்தயக் கஞ்சியில் இனிப்பு சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. வெந்தயதோசை மிகச் சிறந்தது.
வெந்தயக் கஞ்சி
வெந்தயம், அரிசி, பாசிப்பயறு, சின்ன வெங்காயம், பூண்டு, ரகம், இவற்றில்
தேவையான அளவு சேர்த்துகஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
அருமை நண்பரே வெந்தயத்தின் சிறப்புகளை அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறீர்கள்.