ஆதி காலத்திலிருந்தே பெண்கள் கண்களுக்கு கண்மை இட்டு வந்துள்ளனர். கண்மை கண்களுக்கு அழகை மட்டுமல்ல… ஆரோக்கியத்தையும் தரவல்லது.ஆனால் இன்று ரசாயனம் கலந்த கண்மைகளே அதிகம் விற்கப்படுகின்றன. இவை கண்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவையாக இருக்கலாம். எனவே கண்களைக் காக்க இயற்கை கண் மை சிறந்தது எனலாம்.
இயற்கை கண் மை எவ்வாறு தயாரிப்பது
கரிசலாங்கண்ணி கண்மை
கரிசலங்கண்ணி கீரை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது கண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஒரு கீரையாகும்.கரிசலாங்கண்ணிக் கீரையை வேர் நீக்கி சுத்தம் செய்து நீர் விடாமல் இடித்து சாறெடுத்து அந்தச் சாற்றில் சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து வெயிலில் காயவைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த துணியை சிறிய திரிபோல் தரித்து அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி அதில் இந்த திரியால் தீபம் ஏற்றி, அதன்மேல் புதிய சிறிய மண்பாண்டத்தை கவிழ்த்து வைக்க வேண்டும். திரிகள் முழுமையாக எரிந்து முடிந்ததும், அந்த மண்பாண்டத்தில் உள்பகுதியில் திரியின் கரி படிந்திருக்கும். அந்த கரியை எடுத்து சுத்தமான விளக்கெண்ணெயில் குழைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, கடைகளில் வாங்கும் கண்மைக்குப் பதிலாக உபயோகிக்கலாம். இந்த கண்மை, கண்களுக்கு அழகைத் தருவதோடு, புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் கொடுக்கும்.
மாதுளம் பழ கண்மை
நன்கு பழுத்த மாதுளம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, முன்பு சொன்னதுபோல் வெள்ளைத் துணியில் நனைத்து காயவைத்து திரியாகச் செய்து தீபம் ஏற்றி அந்த கரியைச் சேகரித்து விளக்கெண்ணெயில் குழைத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.
இந்த கண்மை உஷ்ணத்தினால் உண்டாகும் கண் பொங்குதலை நீக்கும். கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், கண் கூச்சம் போன்றவற்றைக் குணமாக்கும். கண் சுருக்கங்களை நீக்கி கண்களுக்கு பொலிவூட்டும்.
சோற்றுக்கற்றாழை கண்மை
சோற்றுக்கற்றாழையின் உட்பகுதியை எடுத்து அரைத்து முன்பு சொன்னதுபோல் துணியில் நனைத்து திரியாக்கி, தீபம் ஏற்றி கரியை விளக்கெண்ணெயில் குழைத்து பயன்படுத்த வேண்டும். .
இந்த கண்மை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மேலும் கண் சம்பந்தமான நோய்கள் அணுகாதவாறு பாதுகாக்கும்.
வேப்பம்பூ கண்மை
புதிய வேப்பம்பூக்களைச் சேகரித்து சுத்தம் செய்து நன்கு காயவைத்து அவற்றை வெள்ளைத் துணியில் வைத்து திரிபோல் சுருட்டி விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி கரியை சேகரித்து விளக்கெண்ணெயில் குழைத்து கண்மை தயாரிக்க வேண்டும்.
இந்த கண்மை கண்களுக்கு குளிர்ச்சியையும், எதிர்ப்பு சக்தியையும் உண்டாக்கும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வளிக்கும்.
எனக்கு மூலிகை கண் மை தேவை